Thursday, 9 August 2012

சேர்க்கும் செல்வத்தினால் வரும் தீமை

ஈட்டிய தேன் பூமணம் கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரத்திட்டு அது வலியார் கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
- திருமூலர்

தேனீக்கள் பூக்கள் வாசனையும், சுவையும் அறிந்து அம்மலர்களிலிருந்து இனிக்கும் தேனை உறிஞ்சிக் கொணர்ந்து உச்சி மரக்கிளையிலே கூடுகட்டி பாதுகாப்பாக வைத்துவிடும். அம்மரத்தின் கிளையில் சுவை மிகுந்த தேன் இருப்பதை அறிந்த, வண்டுகளை விட வலிமையான மனிதர்கள், தீயிட்டு தேனீக்களைத் துரத்திவிட்டு அந்தத் தேனை தாம் அபகரித்துக் கொள்வர்.

தேனீக்கள் கட்டிய கூட்டை மனிதர்களுக்குத் தாமே காட்டிக் கொடுத்துத் தேனை இழந்து, உயிரையும் விடுவது போலவே, பாடுபட்டுத் தேடி வைக்கும் பணமும் ஒரு நாள் கள்வர்களின் வசமாகும். எனவே பொருளைத் தேடிச் சேர்க்காதீர். அதனைப் பலருக்குப் பயன்படச் செல்விடுக என்கிறார் திருமூலர்.

தேனீக்களால் பாடுபட்டு சேர்க்கப்பட்ட தேனே அந்தத் தேனீக்களின் உயிருக்கு எமனாய் அமைந்தது போல, நாம் சேர்க்கும் பணமே நமக்கு எமனாய் அமைந்து விடும் என்று எச்சரிக்கவும் செய்கிறார் திருமூலர்.

No comments:

Post a Comment