Friday, 19 October 2012

தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?


தீயவன் சுகப்படுவது ஏன்?

ஒரு ஊரில் ஒரு கருமி இருந்தான். எச்சில் கையால் காக்கை கூட ஓட்ட மாட்டான். அவனுக்கு மாத சம்பளம் ஆயிரம் ரூபாய் தான். சுயநலமாய் வீட்டின் செலவிற்கு சிறிது பணத்தை கொடுத்து விட்டு, மற்றவற்றை தீய வழியில் செலவழித்து வந்தான். ஜாதகப்படி அவனுக்கு நல்ல நேரம் துவங்கியது. இறைவன் கருணையினால் மாத சம்பளம் பத்தாயிரம் ஆனது. 'ஆயிரம் ரூபாய் கொடுப்பதால்தான் அவனால் நல்ல வழியில் பணத்தை செலவு செய்ய இயலவில்லை போலும்', என்று நினைத்த இறைவன் அவனை நல்வழிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்தான். ஆனால் அவனோ பத்தாயிரம் ரூபாயும் தீய வழியில் செலவழித்து மீண்டும் இறைவனிடம் மன்றாடினான். கருணைக்கடலாகிய இறைவனும் இரக்கம் கொண்டு அவன் மாத சம்பளத்தை ஒரு இலட்சம் உயர்த்தினார். ஆனால் அவனுக்கோ தலை-கால் புரியவில்லை 20 நாளிலேயே ஒரு இலட்சத்தை செலவு செய்து கடனும் வாங்க தொடங்கி விட்டான். இத்தனை சந்தர்ப்பம் கொடுத்தும் அவன் திருந்தவில்லையே என்று இறைவனும் மனம் நொந்து 'எல்லாம் விதிப்படி நடக்கட்டும்' என்று கூறி அவன் மேல் விழுந்த அருட்பார்வையை குறைத்து கொண்டார(இறைவனது அருட்பார்வையிலிருந்து யாரும் எப்பொழுதும் இம்மியளவும் விலக முடியாது). ஜாதகப்படி நல்ல நேரம் முடிந்து கெட்ட நேரமும் அவனுக்கு துவங்கியது. அந்த கெட்ட நேரத்தில் கடனாலும், தீய பழக்க வழக்கத்தால் வந்த நோயாலும் அவன் பட்ட துயரத்தை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். 

பாட்ஷா படத்திலும், ரஜினி இதைத்தான் சொன்னார்: "கெட்டவங்களுக்கு ஆண்டவன் (நல்ல நேரத்தில்) அள்ளி கொடுப்பான். ஆனா கைவிட்டு விடுவான்."

தீயவன் சுகப்பட காரணம், அது இறைவன் அவனுக்கு கொடுக்கும் சந்தர்ப்பம்/வாய்ப்பு. இந்த சந்தர்ப்பத்திலாவது அவன் திருந்தி நல்வழிப்படவேண்டும் என்பது இறைவனின் ஆசை. 

நல்லவன் துன்பப்படுவது ஏன்?

அதே ஊரில் ஒரு நல்லவர் இருந்தார். தான் சுயமாய் நேர்வழியில் சம்பாதிக்கும் வருமானத்தில் 20 சதவிகிதம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு மாத சம்பளம் ஒரு இலட்ச ரூபாய். பத்தாயிரத்தை வீட்டு செலவிற்கு கொடுத்து விட்டு, இருபதாயிரத்தை மக்கள் தொண்டுக்கு செலவு செய்து வந்தார். மீதத்தை குழந்தையின் கல்விக்காக சேமித்து வந்தார். நல்லவர்களுக்குத்தான் துயரம் தந்தியில் வருமே. அவருக்கும் ஜாதக்கப்படி கெட்ட நேரம் வந்தது. இறைவனும், இவர் எவ்வளவு தூரத்திற்கு நல்லவர் என்று அறிய முற்பட்டார். சம்பளத்தை பத்தாயிரமாய் குறைத்தார். ஆனால் அந்த நேரத்திலும், அந்த நல்லவர் 2000 ரூபாய் மற்றவர்களுக்கு கொடுத்து வந்தார். இறைவனுக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்தம். சும்மா விடுவாரா? அவர் சம்பளத்தை குறைத்து 1000 ரூபாய் ஆக்கினார். இறைவன் விடாகண்டனாய் இருந்தால், அந்த நல்லவரும் கொடாகண்டனாய் இருந்தார். இலட்சியத்தில் இருந்து விலகாமல் 200 ரூபாய் கொடுத்து வந்தார். வீட்டின் செலவிற்கு அவரது சேமிப்பு உறுதுணையாய் இருந்தது. கெட்ட நேரம் முடியும் தருவாயில், கடைசி மாத சம்பளமாய் நூறு ரூபாய் மட்டும் அந்த நல்லவருக்கு கிடைத்தது. இந்த சம்பளமாவது கொடுத்து இருபது ரூபாய் மற்றவர்களுக்கு கொடுக்க வாய்ப்பளித்து, தனது இலட்சியத்திலிருந்து வழுவாமல் காத்தமைக்காக அந்த நல்லவர் இறைவனுக்கு நன்றி கூறினார்,  

அந்த நல்லவருக்கு கெட்ட நேரம் முடிந்து நல்ல நேரம் தொடங்கியது. அபூர்வமான, அட்டகாசமான ஒரு தொடக்கத்தை இறைவனுக்கு அவருக்கு அருளினார். அதையும் வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். 

பாட்ஷா படத்திலும், ரஜினி இதைத்தான் சொன்னார்: "நல்லவங்களை ஆண்டவன் (கெட்ட நேரத்தில்) சோதிப்பான். ஆனா (எப்பொழுதும்) கைவிட மாட்டான்."

நல்லவர்கள் துன்பப்பட காரணம், அது இறைவன் அவர்களுக்கு வைக்கும் ஒரு சோதனை. 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றிலும், இத்தகைய சோதனைகளையும், கொண்ட இலட்சியத்தில் இருந்து மாறாத அவர்களது மன உறுதியையும் காணலாம். 

இத்தகைய சோதனைகளை இறைவன் நடத்த இரண்டு காரணங்கள் உண்டு. 
1. அவன் உண்மையிலையே நல்லவன் தானா, அல்லது ஊருக்காக வேஷம் போடுகிறானா என்று அறிய. சுட்டாலும் சங்கு வெண்மை தருவது போல, பட்டாலும் இவர்கள் மேன்மக்கள் தானா என்று அறிய.
2. சோதனைக்கு முன்னர் நல்லவர்களது புகழ் குடத்திலிட்ட விளக்கு போல் இருக்கும். சோதனையை அவர்கள் வெற்றிகரமாக முடித்த பின்னர், அவரகளது புகழ் குன்றிலிட்ட விளக்கு போல மிளிரும்.

No comments:

Post a Comment