Friday, 19 October 2012

ஆத்மஞானம்


நான் ஆத்மா பேசுகிறேன். அருட்பெருஞ்ஜோதியான இறைவனின் ஒரு துளி நான். என் இயல்புகள், நோக்கம், ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.

இயல்புகள்: ஒரு புள்ளி வடிவத்துடன் இருப்பவன் நான். எனக்கு அழிவில்லை. இறைவனின் கட்டளைப்படி பிறவி எடுக்க வேண்டியது என் கடமை. நான் பக்குவப்பட்டால், உணர/அறிய ஒன்றும் இல்லாத பட்சத்தில் பிறவி எடுக்க வேண்டியதில்லை. அதை முடிவு செய்பவரும் இறைவனே. இறைவனின் படைப்பில் எல்லா ஆத்மாக்களுக்கும் சமமே. இறைவனின் துளி என்பதால், எனது இயல்பு சுயநலமற்ற தூய அன்பு. அந்த அன்பின் வெளிப்பாடாகிய பிற ஆத்மாக்களுக்கு உதவி செய்வதே எனது சுயதர்மம். அமைதியாய், ஆனந்தமயமாய் இருப்பது எனது இயல்பு.

பிறவிகள்: இறைவனின் ஆணைப்படி நான் பிறப்பெடுக்க வேண்டும். எடுக்கும் பிறவிகளில் சில நிலைகள் உண்டு. முதல் நிலை ஓரறிவு (தொடுணர்வு) படைத்த புல்பூண்டு, மரங்கள். இரண்டாம் நிலை ஈரறிவு (சுவையுணர்வு) கொண்ட நீந்துவன. மூன்றாம் நிலை மூன்றறிவு (நுகர்வுணர்வு) கொண்ட ஊர்வன. நான்காம் நிலை நான்கறிவு (பார்க்கும் திறன்) கொண்ட பறப்பன. ஐந்தாம் நிலை ஐந்தறிவு (செவியுணர்வு) கொண்ட விலங்கினம்.

பல பிறவிகள் எடுத்து ஐந்து நிலைகள் கடந்து எடுக்கும் பிறவி மனிதப்பிறவி. இப்பிறவிகளில் எல்லாம் இயற்கையின் நியதிக்கு உட்ப்பட்டு வாழ வேண்டிய கட்டாயம். இயற்கையுடன் இயைந்து வாழ்வதால் ஆனந்தம் மட்டுமே.

நான் எடுக்கும் உடல்களில் ஆதார சக்தியாய் விளங்குபவன் நானே. தன்னிச்சையாய் செய்யப்படும் காரியங்களுக்கு (சுவாசிப்பது, செரிப்பது, இருதயம் துடிப்பது, இரத்தம் ஓடுவது) சக்தி வழங்குவது நானே.

மனிதப்பிறவி: நான் எடுக்கும் பிறவிகளிலே மிகவும் உன்னதமான பிறவி மனிதப்பிறவி ஆகும். ஏனென்றால், இப்பிறப்பின் மூலம் இறைவனை அடையலாம். மனிதப்பிறவி எடுக்கும்பொழுது மட்டும், மனம் (மனஸ்-மனுஷன் - மனிதன்) என்ற ஒரு வஸ்து உருவாகிறது. இதுவே ஆறாம் நிலை என்ற ஆறாம் அறிவு (பகுத்தறிவு) ஆகும்.

மனம்: மனம் என்பது எண்ணக்குவியல். வாயின் மூலம் வலை கட்டி அவ்வலையிலே இருக்கும் சிலந்தி போல மனது. எண்ணத்தை தோற்றுவித்தும், அவ்வாறு தோன்றிய எண்ணங்களில் கிடப்பதும் மனமே.

மனம் என்பது இறைவன் மனிதனுக்கு அளித்த வரம் மற்றும் சாபம் ஆகும். மனமிருப்பதால் எண்ணமுடியும், எண்ணியதை ஐம்புலன்களினால் அடைய முடியும். அதனால் மனமென்பது வரமாகும். மற்ற உயிரனங்களுக்கு இல்லாத ஒன்று மனிதனுக்கு மட்டும் இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் பகுத்தறிவு.

ஆனால், இந்த மனத்தில் தோன்றும் முதன்மையான எண்ணங்களில் ஒன்று, ‘நான்’ என்ற ஆணவம். ‘நான் ஆத்மா அல்ல, இந்த உடலே நான்’ என்ற எண்ணமே!. இதுவே சாபம்! இந்த ஆணவத்தினால் செய்யப்படும் வினைகளினால் வினைப்பயன் (கர்மா) என்னை தொற்றிக்கொள்கிறது. நிலையாகிய இறைவனையும், ஆத்மாவாகிய என்னையும் மறந்து, இந்த உடலே நிலையானது, உடலால் அனுபவிக்கும் இன்பமே நிலையானது என்ற எண்ணம் வலுக்கிறது. இந்த எண்ணமே மாயை. ஆக தூய ஆன்மாவாகிய நான் மனித உடலெடுத்ததும் ஆணவம், கன்மா, மாயை என்ற மும்மலங்கள் சூழ்கின்றன. இந்த மலங்களை என்னிடம் இருந்து களைய நான் பலப்பல பிறப்புகள் எடுக்க வேண்டியுள்ளது.
மனத்தின் இயல்பு கேட்க மட்டுமே தெரியும். என் இயல்பு கொடுக்க மட்டுமே தெரியும். மனம் உலக ஆசையில் ஈடுபட்டு, என்னை மறந்து, ஐம்புலன்களையும் தன் இஷ்டப்படி ஆட்டுவித்து உவகை கொள்ளும். உவகை இல்லாத நிலையில், கவலை கொள்ளும். உவகை அடைந்து முடித்த பின்னர், மற்றொரு ஆசையை தேடி ஓடும். மனதின் ஆசைகளுக்கு அளவில்லை, அடையும் துன்பத்திற்கும் எல்லையில்லை.
ஆத்ம திருப்தி:கொடுக்க மட்டுமே தெரிந்த எனக்கும், கேட்க மட்டுமே தெரிந்த மனதிற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் மனிதன் இழப்பது அமைதி/நிம்மதி. ஆத்மா, மனம், உடல் எல்லாம் ஒரே நேர்கோட்டில் பயணப்பட்டால் வாழ்க்கை இனிமையானதாய் இருக்கும். ஆனால் பல மனிதர்களின் வாழ்வில் இம்மூன்றூம் வெவ்வேறு வழியில் பயணப்படுகிறது. ஆகையால்தான், மனித வாழ்வில் பல துயரங்கள், துன்பங்கள்.
உதாரணத்திற்கு, கர்ணனின் கடமை தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களை காப்பதும், அவர்கள் கேட்பதை அளிப்பதும். தன்னை எதிர்ப்பவர்கள் தனது தம்பிகள் என்று அறிந்தும், தன்னிடம் தஞ்சம் புகுந்த துரியோதனனை காத்தான். கிருஷ்ணனிடம் புண்ணியத்தின் பலனை தானம் செய்து மோட்சம் அடைந்தான்.
இப்படி ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு காரண காரியத்திற்காக / கடமை செய்ய இவ்வுலகில் மனித பிறவி எடுக்கின்றன. அது என்ன கடமை என்று அறிய மனிதன் முற்பட வேண்டும். அதை அறிந்து, அந்த கடமையை செய்தால் ஆத்மதிருப்தி கிடைக்கும். மனித வாழ்வும் இனிமையாய், பயனுள்ளதாய், ஆனந்தமயமாய் இருக்கும்.
ஆத்ம ஞானம்: இவ்வுலகில் மனதின் ஆசையை நிறைவேற்றி கொள்ள ஓடும் மனிதர்கள் எல்லோரும் ஆறாம் நிலையில் இருக்கிறார்கள். அப்படி தெறிக்கட்டு ஓடும் மனதை அடக்கி, ‘நான் ஒரு ஆத்மா’ என்று உணர்பவர்கள் ஏழாம் நிலையில் அடியெடுத்து வைக்கிறார்கள். இந்நிலையில் இருந்தவர்கள், மனோநாசம் செய்து, எண்ணங்களற்ற நிலையில் இருந்த இரமணர். ‘ஆசைகளே துன்பத்திற்கு காரணம்’ என்று கூறி ஆசைகளை துறந்து, ஆன்ம நிலையான அன்பின் வடிவமாய் இருந்த புத்தர்.
ஆத்ம திருப்தி அடைந்து, இந்த ஏழாம் நிலையை அடைய வேண்டியதுதான் மனிதப்பிறவி எடுத்த எனது நோக்கம்.

தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?


தீயவன் சுகப்படுவது ஏன்?

ஒரு ஊரில் ஒரு கருமி இருந்தான். எச்சில் கையால் காக்கை கூட ஓட்ட மாட்டான். அவனுக்கு மாத சம்பளம் ஆயிரம் ரூபாய் தான். சுயநலமாய் வீட்டின் செலவிற்கு சிறிது பணத்தை கொடுத்து விட்டு, மற்றவற்றை தீய வழியில் செலவழித்து வந்தான். ஜாதகப்படி அவனுக்கு நல்ல நேரம் துவங்கியது. இறைவன் கருணையினால் மாத சம்பளம் பத்தாயிரம் ஆனது. 'ஆயிரம் ரூபாய் கொடுப்பதால்தான் அவனால் நல்ல வழியில் பணத்தை செலவு செய்ய இயலவில்லை போலும்', என்று நினைத்த இறைவன் அவனை நல்வழிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்தான். ஆனால் அவனோ பத்தாயிரம் ரூபாயும் தீய வழியில் செலவழித்து மீண்டும் இறைவனிடம் மன்றாடினான். கருணைக்கடலாகிய இறைவனும் இரக்கம் கொண்டு அவன் மாத சம்பளத்தை ஒரு இலட்சம் உயர்த்தினார். ஆனால் அவனுக்கோ தலை-கால் புரியவில்லை 20 நாளிலேயே ஒரு இலட்சத்தை செலவு செய்து கடனும் வாங்க தொடங்கி விட்டான். இத்தனை சந்தர்ப்பம் கொடுத்தும் அவன் திருந்தவில்லையே என்று இறைவனும் மனம் நொந்து 'எல்லாம் விதிப்படி நடக்கட்டும்' என்று கூறி அவன் மேல் விழுந்த அருட்பார்வையை குறைத்து கொண்டார(இறைவனது அருட்பார்வையிலிருந்து யாரும் எப்பொழுதும் இம்மியளவும் விலக முடியாது). ஜாதகப்படி நல்ல நேரம் முடிந்து கெட்ட நேரமும் அவனுக்கு துவங்கியது. அந்த கெட்ட நேரத்தில் கடனாலும், தீய பழக்க வழக்கத்தால் வந்த நோயாலும் அவன் பட்ட துயரத்தை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். 

பாட்ஷா படத்திலும், ரஜினி இதைத்தான் சொன்னார்: "கெட்டவங்களுக்கு ஆண்டவன் (நல்ல நேரத்தில்) அள்ளி கொடுப்பான். ஆனா கைவிட்டு விடுவான்."

தீயவன் சுகப்பட காரணம், அது இறைவன் அவனுக்கு கொடுக்கும் சந்தர்ப்பம்/வாய்ப்பு. இந்த சந்தர்ப்பத்திலாவது அவன் திருந்தி நல்வழிப்படவேண்டும் என்பது இறைவனின் ஆசை. 

நல்லவன் துன்பப்படுவது ஏன்?

அதே ஊரில் ஒரு நல்லவர் இருந்தார். தான் சுயமாய் நேர்வழியில் சம்பாதிக்கும் வருமானத்தில் 20 சதவிகிதம் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு மாத சம்பளம் ஒரு இலட்ச ரூபாய். பத்தாயிரத்தை வீட்டு செலவிற்கு கொடுத்து விட்டு, இருபதாயிரத்தை மக்கள் தொண்டுக்கு செலவு செய்து வந்தார். மீதத்தை குழந்தையின் கல்விக்காக சேமித்து வந்தார். நல்லவர்களுக்குத்தான் துயரம் தந்தியில் வருமே. அவருக்கும் ஜாதக்கப்படி கெட்ட நேரம் வந்தது. இறைவனும், இவர் எவ்வளவு தூரத்திற்கு நல்லவர் என்று அறிய முற்பட்டார். சம்பளத்தை பத்தாயிரமாய் குறைத்தார். ஆனால் அந்த நேரத்திலும், அந்த நல்லவர் 2000 ரூபாய் மற்றவர்களுக்கு கொடுத்து வந்தார். இறைவனுக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்தம். சும்மா விடுவாரா? அவர் சம்பளத்தை குறைத்து 1000 ரூபாய் ஆக்கினார். இறைவன் விடாகண்டனாய் இருந்தால், அந்த நல்லவரும் கொடாகண்டனாய் இருந்தார். இலட்சியத்தில் இருந்து விலகாமல் 200 ரூபாய் கொடுத்து வந்தார். வீட்டின் செலவிற்கு அவரது சேமிப்பு உறுதுணையாய் இருந்தது. கெட்ட நேரம் முடியும் தருவாயில், கடைசி மாத சம்பளமாய் நூறு ரூபாய் மட்டும் அந்த நல்லவருக்கு கிடைத்தது. இந்த சம்பளமாவது கொடுத்து இருபது ரூபாய் மற்றவர்களுக்கு கொடுக்க வாய்ப்பளித்து, தனது இலட்சியத்திலிருந்து வழுவாமல் காத்தமைக்காக அந்த நல்லவர் இறைவனுக்கு நன்றி கூறினார்,  

அந்த நல்லவருக்கு கெட்ட நேரம் முடிந்து நல்ல நேரம் தொடங்கியது. அபூர்வமான, அட்டகாசமான ஒரு தொடக்கத்தை இறைவனுக்கு அவருக்கு அருளினார். அதையும் வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். 

பாட்ஷா படத்திலும், ரஜினி இதைத்தான் சொன்னார்: "நல்லவங்களை ஆண்டவன் (கெட்ட நேரத்தில்) சோதிப்பான். ஆனா (எப்பொழுதும்) கைவிட மாட்டான்."

நல்லவர்கள் துன்பப்பட காரணம், அது இறைவன் அவர்களுக்கு வைக்கும் ஒரு சோதனை. 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றிலும், இத்தகைய சோதனைகளையும், கொண்ட இலட்சியத்தில் இருந்து மாறாத அவர்களது மன உறுதியையும் காணலாம். 

இத்தகைய சோதனைகளை இறைவன் நடத்த இரண்டு காரணங்கள் உண்டு. 
1. அவன் உண்மையிலையே நல்லவன் தானா, அல்லது ஊருக்காக வேஷம் போடுகிறானா என்று அறிய. சுட்டாலும் சங்கு வெண்மை தருவது போல, பட்டாலும் இவர்கள் மேன்மக்கள் தானா என்று அறிய.
2. சோதனைக்கு முன்னர் நல்லவர்களது புகழ் குடத்திலிட்ட விளக்கு போல் இருக்கும். சோதனையை அவர்கள் வெற்றிகரமாக முடித்த பின்னர், அவரகளது புகழ் குன்றிலிட்ட விளக்கு போல மிளிரும்.